மனிதனுடைய மனமானது இரண்டு பகுதிகளாக பிரிந்து இருக்கின்றது. அதில் ஒன்று ஆழ்மனம் இன்னொன்று வெளிமனம். நமது மனதை நாம் அன்றாட வாழ்க்கையில் 10% தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இன்னும் அதிகமாக ஆழ்மனதை பயன்படுத்தி எப்படி வெற்றி பெறுவது என்பதை இந்த பதிவில் காண்போம்.
அபார ஆற்றல்மிக்க ஆழ்மனம்
அன்றாட வாழ்வில் நாம் நினைப்பது, செயல்படுவது, பேசுவது இந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்வது வெளி மனதின் செயல் பாடுகளே ஆகும். இந்த வெளி மனதின் செயல்பாடு தான் நமது அன்றாட வாழ்வை நடத்திச் செல்கின்றது. ஆனால் நமது ஆழ் மனமோ 90% ஆற்றல்களை தன்னகத்தே தேக்கி வைத்துக் கொண்டுள்ளது.
இதன் சக்தி மிகவும் அபாரமானது. நமது உடல் உறுப்பின் இயக்கங்களை எல்லாம் கட்டுப்படுத்தி அதனை சரியாக இயக்குவது இந்த ஆழ் மனமே. இது எப்படி என்றால், உங்களை அறியாமலேயே உங்கள் உடல் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
குறிப்பாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சுவாசம் வெளியே போவதும், உள்ளே வருவதும், நீங்கள் கவனித்துக் கொண்டா இருக்கின்றீர்கள்? இல்லையே! அந்த வேலையை ஆழ்மனம் தானே செய்து கொண்டிருக்கின்றது.
நாம் அதை கவனிப்பதே இல்லை. அதுபோல பார்த்தீர்கள் என்றால் நாம் தினமும் இரவு உறங்கச் செல்கின்றோம். உறங்கி விளிப்பதற்கு முன் என்னவெல்லாம் நடக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் நமது கடமையைச் செய்கிறோம்.
உறங்கச் செல்கின்றோம். மறுநாள் எழும்பி அன்றாட வேலைகளை கவனிக்கிறோம். இவை அனைத்தும் நமது உள் மனதின் செயல்பாடே. காரணம் உறக்கத்தை பற்றியோ, உறங்கும் நேரத்தை பற்றியோ நாம் கவலைப் படுவதில்லை. அதன் பாட்டிற்கு நடக்கின்றது. அதுபோல நாம் தினமும் உணவு உண்கின்றோம்.
அது ஜீரணிப்பது, சத்துக்கள் உடலுக்கு ஊட்டமாவது , தேவையற்ற கழிவுகள் மறுநாள் வெளியில் செல்வது போன்ற எல்லா வேலைகளையும் நீங்களா செய்கின்றீர்கள்? இல்லையே ! அந்த செயல் தானாகவே நடக்கின்றனவே . ஒரு மனிதனை அபரிமிதமான செல்வ வளங்களுக்கு இட்டுச் செல்கின்ற இந்த ஆழ்மனதை அடையாளம் காணாமல், நாம் ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
இறைவன் மனித உயிருக்கு கொடுத்திருக்கக் கூடிய ஒரு ஆற்றல்மிக்க சக்தி தான் மனிதனின் ஆழ்மனம். இது மற்ற எந்த உயிரினத்துக்கும் கொடுக்கப் படவில்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ஆழ் மனதின் அற்புத செயல்பாடு
நமது ஆழ் மனமானது சுய கட்டளைகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றது. நாம் எந்தவிதமான கட்டளைகளை கொடுக்கிறோமோ, அல்லது எண்ணங்களை எண்ணுகிறோமோ, அதுபோல உணர்வு ரீதியாக எந்த உணர்வுகளை மனதில் அழுத்தமாக கொடுக்கிறோமோ, வாய்திறந்து என்னவெல்லாம் பேசுகின்றோமோ, அனைத்தையும் அது பதிவு செய்து கொண்டு, தனது கட்டளையாக ஏற்று கொண்டு செயல்பட துவங்குகிறது.
நமது ஆழ் மனமானது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவிற்கு மாபெரும் சக்தி வாய்ந்த ஒரு கருவூலமாக செயல்படுகின்றது. இவ்வளவு சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆழ்மனது ஒருபோதும் உறங்குவதில்லை. நமது வெளி மனது உறங்கினாலும் இந்த ஆழ் மனது எப்போதும் விழிப்பாக இருக்கின்றது.
மேலே சொன்னது போல நமது கட்டளைகளுக்காக காத்துக் கிடக்கின்றது. நாம் மலை என நினைக்கும் பெரிய செய்ல்களைக் கூட, சரியான கட்டளை கொடுத்து விட்டோம் என்றால் அது வெகு சுலபமாக முடித்துக் கொடுக்கின்றது.
எமது முந்தய பதிவை வாசிக்க: நாம் விரும்பியதை அடைவது எப்படி?
உங்கள் சக்தியை உணர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்கள் ஆழ்மனதில் இத்தகைய பிரம்மாண்டமான சக்தியை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவைப்படும் போது இந்த சக்தியை நீங்கள் பயன்படுத்தி நினைத்ததை அடைவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அதற்காக உங்களை பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள். பிரபஞ்சமானது மனிதர்களுக்கு தாங்கள் விரும்பியதை அடைய கொடுக்கப் பட்டுள்ள ஒரு அற்புதமான கொடை தான் இந்த ஆழ்மனம். மனித குலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் எனலாம். இயற்கை நமக்கு அருள இருக்கும் இத்தகைய ஆசீர்வாதத்தை நாம் பயன்படுத்தாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.
உங்கள் ஆழ்மனது உங்களுக்கு எஜமான் அல்ல. மாறாக அந்த ஆள் மனது உங்களது ஒரு சிறந்த வேலைக்காரன் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால் அவனுக்கு என்ன கட்டளைகளை கொடுப்பீர்களோ, அதை அப்படியே அவன் நிறைவேற்றுவான்.
தெளிவான கட்டளை
அதுபோலத்தான் ஆழ்மனம் என்கின்ற வேலைக்காரனுக்கு தெளிவான கட்டளைகளை நீங்கள் கொடுப்பதற்கு தயாராக இருந்தால், அதை வெகு விரைவில் உங்களுக்கு நிறைவேற்றி கொடுப்பான். உங்கள் ஆழ்மனதிற்கு கட்டளை இடும் போது அரை குறையாக எனக்கு இதைச் செய் அதைச் செய் என சொல்லிவிட்டு அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
அப்படி இருந்தால் எந்த செயலையும் அதுவால் செய்து கொடுக்க இயலாது. ஆக உங்களது ஆழ்மனம் திறன்பட செயல்பட வேண்டுமென்றால் உங்கள் கட்டளைகள் எல்லாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
சந்தேக குணத்துடனும் நம்பிக்கை குறைவாகவோ இந்தச் கட்டளைகளை நீங்கள் கொடுப்பீர்கள் எனில் உங்கள் ஆழ் மனதால் செயல்பட இயலாது. இதனால்தான் பலரும் வாழ்க்கையில் வெற்றியை தவற விடுகின்றனர்.
ஆழ்மன அதிசயம்
ஆழ் மனமானது உங்கள் கட்டளைகளுக்கு ஏற்றவாறு எப்படி செயல்படுகிறது என்பதற்கு சிறந்த ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். இன்று இரவு நீங்கள் படுக்கச் செல்லும் முன் கண்களை மூடி அமைதியாக இருந்து கொண்டு, அதிகாலையில் 4 மணிக்கு என்னை எழுப்பி விடு ஆழ்மனமே எனச் உறுதியாகச் சொல்லுங்கள்.
இப்படி உங்கள் மனதிற்கு ஓரிருமுறை சொல்லிவிடுங்கள். பின்னர் அமைதியாக தூங்கச் செல்லுங்கள். பின்னர் நடக்கும் அதிசயத்தை பாருங்கள். ஆம் அதிகாலையில் உங்களுக்கு விழிப்பு கிடைக்கும் நேரம் நீங்கள் கடிகாரத்தை பார்த்தீர்களானால் சரியாகவே மணி 4 ஆக இருக்கும்.
எவ்வளவு அதிசயம் பாருங்கள். இதை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்திப் பாருங்கள். உங்கள் வாழ்வில் மற்ற எல்லா செயல்களையும் நடைமுறைப் படுத்துவதற்கு இது ஒரு உதாரணமாக அமையும்.
ஆழ் மனதில் ஒலிக்கும் குரல்
இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் சில நிகழ்வுகள் நடக்க வேண்டுமெனில் நீங்கள் அமைதியான சூழ்நிலையில் சென்று உங்கள் மனதிற்கு தேவையை கட்டளையாக கொடுங்கள். அதே நேரம் உறுதியாக கொடுங்கள். பின்னர் சற்று நேரம் வேறு எதையும் குறித்து சிந்திக்காமல் மிகவும் அமைதியாக இருங்கள்.
நீங்கள் கொடுத்த கட்டளை தொடர்பாக உங்கள் உள்மனதில் இருந்து மென்மையான குரல்கள் கேட்கலாம். அந்தக் குரலானது இதை செய் அல்லது செய்யாதே என சொல்வதாக அமையும். அல்லது உணர்வாக கூட அமையலாம்.
குரல் கேட்காதவர்களுக்கு இன்னொரு அடையாளம் நிகழலாம். அது என்னவென்றால் நீங்கள் கேட்ட செயல் அது ஒவ்வாததாக இருந்தால் உங்கள் நெஞ்சுப் பகுதி சற்று இறுக்கமாக அழுத்தமாக உணரப்படலாம்.
அல்லது நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு கூட நடக்கலாம். இது நீங்கள் கேட்டது நடக்காது என்பதற்கான ஒரு அடையாளமாக கூட இருக்கலாம். இதற்கு மாறாக உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சியான உணர்வு, அல்லது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உங்களுள் நிலவும் ஆனால் நீங்கள் கேட்டுக்கொண்ட செய்தி நடக்கவிருக்கிறது என்பதன் அடையாளமாகும்.
தியானத்தின் ஆற்றல் மிக்க சக்தி
நமது வாழ்வில் சாதனைகள் புரிவதற்கு மிகவும் தடையாய் இருப்பது நமது சலன எண்ணங்களே. நமது எண்ணங்கள் அமைதியானால் மட்டுமே ஆழ் மனது தனது வேலையினை சரியாக செய்ய இயலும். அலைபாயும் மனதை அமைதி படுத்த பல உத்திகள் உள்ளன.
அதில் தலைசிறந்த உத்தி தான் தியானம். தியானம் என்றால் என்ன? தியானத்தால் பரிபூரண அமைதியை பெற்று ஆன்மாவின் குரலை கேட்பது போன்ற தகவல்களை தொடர்ந்து காண்போம்.
தியானம் என்பது
தியானம் என்பது நமக்குள்ளே உறைந்துக் கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர உதவும் ஒரு மாபெரும் ஆற்றலாகும். உலக ஆசாபாசங்களில் இருந்து விடுவித்து, பல்வேறு விதமான குழப்பங்களில் இருந்து தெளிவைத் தந்தது பரம அமைதியான ஒரு சுகமான அனுபவத்துக்கு கொண்டுச் செல்லும் வல்லமை படைத்தது தான் தியானம்.
இந்த பேரமைதி நிலையில் தான் நமது ஆழ்மனது இயற்கையாகவே பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய அனைத்தயும் பெற்று தருகின்றது. உலக அளவில் வெற்றி பெற்ற மாமனிதர்கள் எல்லாம் இந்த அமைதி நிலையில் இருந்து அபரிமிதமான சக்தியினை பெற்று தான் சரித்திரத்தில் இடம் பெற்றுகின்றார்கள். நீங்களும் உணர்வுடன் இந்த தியானத்தை பழகினால் உள்மனதின் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்வதெற் கென்று ஒரு தனி அறையோ அல்லது இடமோ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். யாருடை குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டும். குறைந்தது 1 மணி நேரம் தியானத்தில் இருக்க வேண்டும். சற்று நேரம் அதிகம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. தினமும் ஒரே இடத்தில் இருந்து தியானம் செய்ய பழக வேண்டும்.
காரணம் ஒரே இடத்தில் இருந்து தியானம் செய்வதால் அந்த இடத்தில் சக்தி அதிகரிக்கும். மனதை அமைதி படுத்த சரியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மூக்கின் நுனியினை பார்த்தவாறு சுவாசத்தை கவனியுங்கள். சுவாசம் உள்ளே போவதும், வெளியே வருவதும் மட்டும் உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.
இவ்வாறு நேரம் செல்லச் செல்ல வெளி மனது அடங்கி விடும். இப்போது உங்கள் தேவை என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். அதை அடைய வழியும் கேளுங்கள். சற்று நேரத்தில் மனதின் குரலை நிச்சயம் உங்களால் கேட்க முடியும். அந்த வழிகாட்டலை நீங்கள் பின் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.
யாருக்கும் கெடுதல் நினைக்காதீர்
இந்த தியானத்தில் இருக்கும் போது யாருக்கும் கெடுதல் நினைக்க கூடாது. தவறாக யாரையும் பேசக்கூடாது. மாறாக நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் வளர்த்து வந்தால் உங்கள் காரியங்கள் வெகு விரைவில் வெற்றி பெறும் . உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ண அலைகளை மனதில் பரவ விடுங்கள்.
நமது பகைவர்கள் கூட நன்றாக வாழவேண்டும் என்று எண்ணுவது நமக்கு நல்ல பலன்களை வழங்கும். உங்களுக்கு உதவுவதற்கு என்றே ஆழ்மனம் காத்துக் கொண்டு இருக்கின்றது. நீங்கள் ஒரு தொழில் செய்பவர் அல்லது பல நாட்களாக ஏதோ ஒரு உதவியை எதிர்பார்த்து இருப்பவர் என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தியானம் செய்து பழகும்போது திடீர் என ஒரு நபரை சென்று பார்க்கவேண்டும் என மிக அழுத்தமாக தோன்றும்.
அது உங்கள் ஆழ்மனதின் குரல் என்பதில் ஐயம் இல்லை. அந்த நபரை சென்று பார்த்தால் நிச்சயம் நன்மை நடக்கும். நீங்கள் உங்கள் ஆழ் மனதுடன் பரிபூரணமாக சரணாகதி ஆகிவிட்டல் அது நிச்சயம் உங்களை பாதுகாக்கும். உங்களை ஒருபோதும் கை விடாது.
இதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.பல முறைகளில் உங்கள் மனம் உங்களுக்கு வழிகாட்டும்.யாரையாவது சந்திக்க வைத்து உங்கள் தேவைகளை நிறைவேற்றும். இவ்வாறு ஆழ்மனதின் சக்திகளை பயன்படுத்தி வாழ்வில் வசந்தங்களை அனுபவித்து மகிழ வாழ்த்துகின்றேன்.
எமது அடுத்த பதிவை படிக்க: மனதை தொடர்பு கொள்ள டெலிபதி